லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலி


லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:45 PM GMT)

நாட்டறம்பள்ளி லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்டெய்னர் லாரி

திருப்பதியிலிருந்து திருப்பூருக்கு நேற்று முன்தினம் மினி லாரி புறப்பட்டது. அதனை சேலம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் அண்ணாதுரை (வயது 53) ஓட்டி வந்தார். மாற்று டிரவைரான மேட்டூரை சேர்ந்த தேசிங்கு (52), கிளீனராக அதே ஊரை சேர்ந்த சம்பத் மகன் சித்தார்த்தனும் (30) இருந்தனர்.அந்த மினி லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பெங்களூரு நோக்கி முன்னாள் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் மினி லாரியின் முன்பகுதி சேதம் அடைந்ததோடு டிரைவர் உள்பட 3 பேரும் வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

டிரைவர் பலி

தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மினி லாரியில் இருந்த டிரைவர் உள்பட 3 பேரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினி லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்தக்கு காரணம் என்பது தெரியவந்தது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story