மின்கம்பத்தில் ஏறி இறங்காமல் அடம்பிடித்த போதை ஆசாமி


மின்கம்பத்தில் ஏறி இறங்காமல் அடம்பிடித்த போதை ஆசாமி
x
தினத்தந்தி 30 Aug 2023 1:15 AM IST (Updated: 30 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்தில் ஏறி இறங்காமல் அடம்பிடித்த போதை ஆசாமி

கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூர்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 55). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.பூபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். சம்பவத்தன்று இவர், மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். வழக்கத்தை விட அதிக போதையில் இருந்த அவர் அட்டகாசத்தின் உச்சிக்கே சென்றார்.

முதலில் அந்த பகுதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு சென்றார். வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த ஓடுகளை பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பூபதியை கண்டித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகும் பூபதியின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் பூபதியின் தொல்லை அதிகரிக்கவே எரிச்சல் அடைந்த ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடமும் பூபதி, சண்டித்தனத்தை காட்டினார். அவர் போதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து, வீட்டில் போய் படுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டனர். போலீசாரைக் கண்டதும் பூபதி நல்லபிள்ளையாய் மாறி வீட்டில் போய் படுத்துக் கொண்டார். போலீசார் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் பூபதி வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். மரம் ஏறும் தொழிலாளி என்பதால் சர, சரவென மின்கம்பத்தில் ஏறி விட்டார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கீழே இறங்கும்படி கூறி சத்தம் போட்டனர். யார் சொல்வதையும் கேட்காமல் மின் கம்பத்தில் ஏறினார். இதைப்பார்த்து பதறிப்போன பொதுமக்கள் உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பூபதி தப்பினார். மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்தார்.

மீண்டும் போலீசுக்கு தகவல் பறக்க போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பூபதியிடம் நைசாக பேசி அவரை கீழே வரச் செய்தனர். அதற்குள் விடிந்து அதிகால 5 மணி ஆகிவிட்டது. பின்னர் பூபதியை பிடித்து தொண்டா முத்தூர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்று கண்டித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story