அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரிப்பு


அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 May 2023 6:45 PM GMT (Updated: 16 May 2023 6:46 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பகல் வேளைகளில் காரைக்குடி பகுதியில் உள்ள சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி

சிவகங்கை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பகல் வேளைகளில் காரைக்குடி பகுதியில் உள்ள சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலமாக மே மாதம் இருந்து வருகிறது. இக்காலக்கட்டத்தில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுவதால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர் கோடை வெயிலை தவிர்க்கும் வகையில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்தாண்டு கோடை காலமாக கடந்த 1-ந்தேதி முதல் இருந்து வருகிறது. இதில் அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நீடிக்கிறது. சுமார் 24 நாட்கள் வரை இந்த வெயில் தாக்கம் இருக்கும் நிலையில் ஆரம்ப காலக்கட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால் குளுமையான நிலை இருந்தது.

சாலைகள் வெறிச்சோடின

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பகல் வேளையில் அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் அதிகளவு இருப்பதால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலை உள்ளது. இதனால் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மதிய வேளையில் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற நாட்கள் மதிய வேளையில் மக்கள் கூட்டம் குறைந்தளவே உள்ளது.


Next Story