ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியாகிறது


ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியாகிறது
x

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமஜெயம் கொலை

திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அதன்அடிப்படையில் திருச்சியை சேர்ந்த சாமிரவி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடிகணேசன், திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து, சீர்காழியை சேர்ந்த சத்யராஜ், தினேஷ்குமார், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவகுணசேகரன், சிதம்பரத்தை சேர்ந்த சுரேந்தர், கலைவாணன், சிதம்பரம் செந்தில் ஆகிய 13 பேரிடம் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

உண்மை கண்டறியும் சோதனை

இவர்களில் தென்கோவனை தவிர மற்ற அனைவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்பு கொண்டதால் 12 பேரிடம் சோதனை நடத்த திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6 உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயஅறிவியல்துறை அலுவலகத்தில் 12 பேருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தினமும் 4 பேர் வீதம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

டெல்லியில் இருந்து வந்து இருந்த மத்திய தடயவியல்துறை நிபுணர்கள் 12 பேரிடமும் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றுக்கு பதில் பெற்றனர். அதில், ராமஜெயத்தை உனக்கு தெரியுமா?, அவர் கொலை செய்யப்பட்ட தினத்தில் நீ எங்கே இருந்தாய்?. ராமஜெயம் கையில் அணிந்து இருந்த நீலக்கல் மோதிரத்தை எடுத்து சென்றது யார்? என்பன உள்பட பல்வேறு முக்கிய கேள்விகள் இடம் பெற்று இருந்தன.

அடுத்தக்கட்ட விசாரணை

இந்த கேள்விகளை 12 பேரிடமும் மாற்றி, மாற்றி கேட்டனர். இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் பதில் அளிக்கும்போது, அவரது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அங்குள்ள கருவியில் பதிவாகும். அதை வைத்து அவர் உண்மை சொல்கிறாரா? அல்லது பொய் சொல்கிறாரா? என்பதை கணிக்க முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை அடுத்த வாரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் அளிக்கப்பட உள்ளதாகவும், . அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஒருசிலரிடம் மட்டும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது ஒட்டு மொத்தமாக 12 பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பதால் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story