சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி


சின்னசேலம் அருகே     கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

விவசாயி

சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55) விவசாயி. இவர் நேற்று மதியம் தனது மக்காச்சோள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி செல்வியுடன் சென்றார். பின்னர் அவர் கிணற்றின் மேல்பகுதியில் உள்ள மின் மோட்டார் சுவிட்சை இயக்கினார். ஆனால் மோட்டார் இயங்கவில்லை. இதையடுத்து அவர் கிணற்றின் சுற்றுவட்டார பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை பார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது அவர் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி தனது கணவரை காப்பாற்றக் கோரி கூச்சலிட்டார். இதைகேட்ட அருகில் விவசாய பணியில் ஈடுபட்ட அவர்களது மகன் வெங்கடேசன் மற்றும் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி பெரியசாமியை தேடினர்.

கதறி அழுதனர்

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சின்னசேலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பெரியசாமியை பிணமாக மீட்டனர். அப்போது அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதையடுத்து பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story