2-வது திருமணம் செய்த விவசாயி அடித்துக்கொலை


2-வது திருமணம் செய்த விவசாயி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2023 6:45 PM GMT (Updated: 3 Jan 2023 6:45 PM GMT)

2-வது திருமணம் செய்த விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது முதல் மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

2-வது திருமணம் செய்த விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது முதல் மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

2-வது திருமணம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தை சேர்ந்தவர் வையக்கிளவன் (வயது 58). விவசாயி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (54). இவர்களுக்கு வசீந்திரன் (24) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வையக்கிளவனுக்கும், சுப்புலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வையக்கிளவன் தனியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளமரிச்சி கட்டி கிராமத்தை சேர்ந்த முத்து லட்சுமி (35) என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அவர் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் முதல் மனைவி சுப்புலட்சுமிக்கும், வையக்கிளவனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

நேற்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகன் வசீந்திரனை, சுப்புலட்சுமி தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். இதையடுத்து வசீந்திரன் அங்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார். ேமலும் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை வையக்கிளவன் தலையில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வையக்கிளவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏர்வாடி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து வசீந்திரன் மற்றும் அவரது தாயார் சுப்புலட்சுமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story