விவசாயி ஓட, ஓட விரட்டி சரமாரி வெட்டிக்கொலை


விவசாயி ஓட, ஓட விரட்டி சரமாரி வெட்டிக்கொலை
x

வீரவநல்லூரில் விவசாயி ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிள்களில் வந்து வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் 1-வது தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பண்ணையார் குமார் என்ற அருணாசலகுமார் (42). விவசாயியான இவர் பொக்லைன் எந்திரங்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். மேலும் தனது தோட்டத்தில் செங்கல்சூளையும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி துர்க்கா தேவி. இவர்களுக்கு கருப்பசாமி, முருகன் ஆகிய 2 மகன்களும், மனிஷா என்ற மகளும் உள்ளனர்.

நேற்று மாலையில் அருணாசலகுமார் வீரவநல்லூர் ரெட்டியார்புரம் சாலையில் வீற்றிருந்தான்குளம் பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட 5 மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 மோட்டார் சைக்கிள்களில் அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருணாசலகுமார் செல்போனில் தனது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவாறே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். எனினும் வீற்றிருந்தான்குளம் பகுதியில் சென்றபோது, அவரை கும்பல் வழிமறித்தது. இதனால் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அருணாசலகுமார் தப்பி ஓடினார். எனினும் மர்மநபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று அருணாசலகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த அருணாசலகுமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்மநபர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்களிடம் சிக்காமல் மர்மநபர்கள் தப்பி சென்றனர். இறந்த அருணாசலகுமாரின் உடலைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபகுமார் மற்றும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அருணாசலகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

அருணாசலகுமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீரவநல்லூரில் விவசாயி ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story