மீன் விற்பனை கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்


மீன் விற்பனை கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 9:08 AM GMT)

விளமல் பகுதியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட மீன் விற்பனை கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

திருவாரூர்

ரூ.5 லட்சத்தில் மீன் விற்பனை கூடம்

திருவாரூர் விளமல் மன்னை சாலையின் ஓரங்களில் ஏராளமான மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மீன் வாங்க வருவோர் சாலை ஓரங்களிலேயே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் மீன்கழிவுகளும் சாலையோரங்களிலேயே வீசப்படுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இருந்தது.

இதனை தவிர்க்கும் வகையில் விளமல் மன்னை சாலையில் கூட்டுறவு நகர் அருகில் ஊரக வளர்ச்சித்துறை- தண்டலை ஊராட்சி சார்பில் மீன் விற்பனை கூடம் ரூ.4.96 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மீன் விற்பனை கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஒரே இடத்தில் மீன் விற்பனை செய்ய முடியும். இதனால் விளமல் மன்னை சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும்.

பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

சாலை ஓரங்களில் வீசப்படும் மீன் கழிவுகளால் ஏற்படும் தொற்றுநோய் அபாயமும் தவிர்க்கப்படும். ஒரே இடத்தில் ஆறு மீன் கடைகள் இருக்கும் போது, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நல்ல மீன்களை குறைந்த விலையில் பெறுவதற்கு வாய்ப்பாகவும் அமையும். எனவே இந்த புதிய மீன் விற்பனை கூடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story