கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் பெருந்தலைவர் காமராஜர் -கவர்னர் பேச்சு


கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் பெருந்தலைவர் காமராஜர் -கவர்னர் பேச்சு
x

கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் பெருந்தலைவர் காமராஜர் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. கூறினார்.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று மு.வ. அரங்கில் நடந்தது. இதில் காமராஜர் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்த மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் படித்த மாணவ, மாணவிகள் 1,33,091 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, நிகழ்ச்சியில் துணைவேந்தர் குமார் வரவேற்று, பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். ஐ.ஐ.எஸ்சி., முன்னாள் இயக்குனரும், தேசிய உயிரி அறிவியல் மையத்தின் தலைமை பேராசிரியருமான பலராம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மத்திய இணை மந்திரி முருகன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

கவர்னர் ஆர்.என்.ரவி

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ள காமராஜர் எளிமையான பின்புலத்தை கொண்ட சிறந்த தேசியவாதி. அவரது வாழ்க்கை நமக்கு பாடமாகும். அவர், தனது இளமைப்பருவத்தில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டவர். அவரது அரசியல் வாழ்க்கை அங்கிருந்து தொடங்கியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது கருத்துக்களை தைரியமாக பேசியவர். கி.பி.1600-களில் வர்த்தக நோக்கில் நிறுவனமாக வந்த ஆங்கிலேயர்கள் 1750-களில் நமது மாகாணங்களை கைப்பற்றும் அரசியல் அதிகாரிகளாக மாறினர். நமது ஒற்றுமையை பலவீனப்படுத்தி, மக்களை பிரித்தனர்.

காமராஜரின் கல்விச்சீர்திருத்தம்

இந்தியாவின் தொழில்நுட்ப அறிவை தங்கள் வசப்படுத்தி கொள்வதற்காக தனி கல்விக்கொள்கையை உருவாக்கினர். அத்தகைய கல்வி முறை தான் தற்போது வரை இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களின் கல்வி முறையை மாற்ற வேண்டும் என்பதற்காக புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக கல்விக்கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வர அடித்தளமிட்டவர் பெருந்தலைவர் காமராஜர். நமது தொழில்நுட்பம், கட்டமைப்பு, உயர்கல்வி என அனைத்துக்கும் அடித்தளம் போட்டவர் அவர். மாணவ, மாணவிகள் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினால் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story