ஏரியில் மூழ்கி சிறுமி சாவு


ஏரியில் மூழ்கி சிறுமி சாவு
x

கிருஷ்ணகிரி அருகே துணி துவைத்த போது ஏரியில் தவறி விழுந்து சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.

கிருஷ்ணகிரி

ஏரியில் மூழ்கி சாவு

கிருஷ்ணகிரி அருகே கோடிப்பள்ளி பக்கமுள்ள சீலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். தொழிலாளி. இவரது மகள் லாவண்யா (வயது 18). தந்தை இறந்து விட்டதால் தாயார் முனிலட்சுமியின் பராமரிப்பில் சிறுமி இருந்தாள். நேற்று முன்தினம் சிறுமி துணி துவைப்பதற்காக மலைச்சந்து பகுதியில் உள்ள கரடிமலை ஏரிக்கு சென்றாள்.

அங்கு துணிகளை துவைத்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் லாவண்யா ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் லாவண்யாவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து லாவண்யாவின் தாயார் முனிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஏரியில் மூழ்கி சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story