குளத்தில் மூழ்கி சிறுமி சாவு
குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாள்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இறவுசேரி கிராமத்ைத சேர்ந்தவர் சோமன், தொழிலாளி. இவருடைய மனைவி தேன்மொழி. இவர்களது மகன் வேம்பரசன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறான். மகள் அபிருதா (9). இவள் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். சோமன் மலேசியா நாட்டில் வேலை செய்து வருகிறார்.
தற்போது ஆயுதபூஜை விடுமுறை என்பதால் உஞ்சனை பகுதியில் உள்ள தேன்மொழியின் அக்காள் சுமதியின் வீட்டுக்கு வேம்பரசன், அபிருதா வந்திருந்தனர். நேற்று மாலையில் சுமதி துணி துவைப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு சென்றார். அப்போது அவர் வேம்பரசன், அபிருதாவையும் அழைத்து சென்றார்.
சுமதி கரையோரத்தில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். வேம்பரசனும், அபிருதாவும் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுமதி கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுவனையும், சிறுமியையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி அபிருதா பரிதாபமாக இறந்தாள். வேம்பரசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இது ெதாடர்பாக ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.