சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 13 May 2023 6:45 PM GMT (Updated: 13 May 2023 6:46 PM GMT)

பண்ருட்டில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பலூன் வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்

கடலூர்

பண்ருட்டி

பலூன் வியாபாரி

நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). ஊர் ஊராக சென்று பலூன் மற்றும் பொம்மை வியாபாரம் செய்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பாலமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வியாபாரத்துக்கு சென்று வந்தார். அப்போது அவர் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது.

பாலியல் பலாத்காரம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை காணாததால் இது குறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனையும், சிறுமியையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடத்தி சென்ற சிறுமியை பாலமுருகன் உளுந்தூர்பேட்டை அருகே விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் உளுந்தூர்பேட்டைக்கு சென்று சிறுமியை மீட்டு வந்தனர். அவளிடம் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தியதில் பாலமுருகன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் பாலமுருகனை போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story