நாகர்கோவிலில் சிறுமியை கடத்தி பலாத்காரம்; டிரைவர் கைது


நாகர்கோவிலில் சிறுமியை கடத்தி பலாத்காரம்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியுடன் பழக்கம்

அஞ்சுகிராமம் பகுதியை சோ்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 27), டெம்போ டிரைவர். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு டெம்போவில் கட்டிட பொருட்களை ஏற்றி வந்தார். அப்போது அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமிக்கும், சுயம்புலிங்கத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகினர். இதற்கிடையே சிறுமி தன்னுடைய படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் அவர் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். இந்தநிலையில் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள தோழி ஒருவர் வீட்டில் இருப்பதாக பெற்றோருக்கு தெரியவந்தது.

உடனே அவர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் சரிவர பதில் கூறவில்லை. சிறுமி அங்கு வரவில்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் சிறுமி வசிக்கும் பகுதி நாகர்கோவில் என்பதால் இதுதொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர்.

பலாத்காரம்-கைது

இதற்கிடையே மாயமான சிறுமி வீட்டுக்கு வந்தார். அப்போது சிறுமி தனது பெற்றோரிடம், சுயம்புலிங்கம் தன்னை காதலித்து வந்ததாகவும், அவர் தன்னை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சுயம்புலிங்கம் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடத்தி சென்று 4 நாட்கள் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் அம்பலமானது.

அதைத் தொடர்ந்து சுயம்புலிங்கம் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

--


Next Story