சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில்    வாலிபருக்கு 10 ஆண்டு சிறை    கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x

பண்ருட்டி அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்துநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் அஜித்குமார் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு பண்ருட்டியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்த, 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார். உடனே அவர், நீ என்னை காதலிக்கவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

அதையடுத்து அந்த சிறுமியும், அஜித்குமாரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7.12.2019 அன்று பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஜவுளிக்கடைக்கு சிறுமி நடந்து சென்றுள்ளார். அப்போது, அஜித்குமார் அந்த சிறுமியை கடத்தி கெடிலம் சின்னகுப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

10 ஆண்டு சிறை

பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதையடுத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி சிறுமியின் தாய் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் சிறுமியை கடத்திச்சென்று, அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அஜித்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்புத்துறை மூலம் அரசின் ஏதாவது ஒரு நிதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Next Story