தற்காலிக கால்நடை டாக்டர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் -எடப்பாடி பழனிசாமி


தற்காலிக கால்நடை டாக்டர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
x

பணி நிரந்தரம் செய்ய கோரும் தற்காலிக கால்நடை உதவி டாக்டர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 2012-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இனச் சுழற்சி அடிப்படையில், காலமுறை ஊதியத்தில் 80 பெண்கள் உள்ளிட்ட 454 தற்காலிக கால்நடை உதவி டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சுமார் 11 ஆண்டுகளாக, தற்காலிகமாக பணிபுரிந்துவரும் இவர்கள், தங்களது பணி நிரந்தரம் செய்யப்படும் என்று நினைத்திருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு போட்டித் தேர்வு மூலமே நிரந்தரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மேற்கண்ட தற்காலிக கால்நடை உதவி டாக்டர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வை எழுதி உள்ளனர்.

உண்ணாவிரத போராட்டம்

இந்த கால்நடை உதவி டாக்டர்கள், தாங்கள் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து 30 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதால், பாடத்திட்டம் மாறுதல் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறையில் மாறுதல்கள் போன்றவை நடந்துள்ளதாகவும்; எனவே, சிறப்பு நேர்வாக தங்களது தற்காலிகப் பணியை வரன்முறைப்படுத்த வேண்டி 18-5-2023 அன்று (நேற்று) அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்காலிக கால்நடை உதவி டாக்டர்கள் அனைவரும், தங்களுடைய பணி நிரந்தரம் செய்யப்படும் என நம்பி பணிபுரிந்து வந்த நிலையில், தங்களுக்கு 50 வயது கடந்துவிட்டதை கருத்தில்கொண்டு, தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியுள்ள தங்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) மற்றும் தற்காலிகமாக உதவி கால்நடை டாக்டர்களாக பணிபுரிந்த ஆண்டு 'சீனியாரிட்டி' ஆகிய இரண்டின் அடிப்படையிலும் சிறப்பு ஊக்க மதிப்பெண் கூடுதலாக வழங்கிடுமாறு, அவர்கள் வைத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story