பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி மகா உற்சவம் நாளை நடக்கிறது


பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி மகா உற்சவம் நாளை நடக்கிறது
x

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

சென்னை,

திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில், திண்டிவனத்திலிருந்து 29-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலில் 23-ந்தேதி (நாளை) அனுமன் ஜெயந்தி மகா உற்சவம் நடக்க உள்ளது. இந்த விழாவிற்குண்டான பூர்வாங்க பூஜைகள் நடந்து வருகிறது.

லட்சார்ச்சனை, விஷேச யாகசாலை பூஜை காலை மற்றும் மாலை, இருவேளைகளிலும் நடக்கிறது. 23-ந்தேதி (நாளை) காலை 8.30 மணியளவில் மூலவர் ஆஞ்சநேயருக்கு, 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன் ''விஷேச திருமஞ்சனம்'' நடைபெற உள்ளது.

சொர்க்கவாசல் திறப்பு

ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணியிலிருந்து ''அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள்'' நடைபெறும். அதிகாலை முதலே, பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு சீனிவாச பெருமாள் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளுதல். 23-ந்தேதி (நாளை) மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து வைபவங்களுக்கும், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் கார்களை நிறுத்த, சத்துவா நிறுவன வளாகத்தில், முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு, அருகாமையில், சாலை ஓரமாக உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வருகை தரும் தாய்மார்களில், தங்களின் குழந்தைகளுக்கு பால் புகட்டும் தேவையுள்ளவர்களுக்கென தனியறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் பஞ்சவாடி நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.


Next Story