ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே லஞ்ச வழக்கில் சிக்கிய சொத்துகளை அரசு ஊழியரின் வாரிசுகள் பெறமுடியும்


ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே லஞ்ச வழக்கில் சிக்கிய சொத்துகளை அரசு ஊழியரின் வாரிசுகள் பெறமுடியும்
x

ஆதாரங்கள் தாக்கல் செய்தால் மட்டுமே லஞ்ச வழக்கில் சிக்கிய சொத்துகளை அரசு ஊழியரின் வாரிசுகள் பெறமுடியும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணிபுரிந்தவர் தன்ராஜ். இவர் அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2.66 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும், ரூ.56.66 லட்சம் ரொக்கப்பணமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மரணம்

ஜாமீனில் வெளியே வந்த தன்ராஜ் மீதான வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தன்ராஜ் திடீரென மரணமடைந்து விட்டார்.

இதையடுத்து, தன்ராஜிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிபிரியா ஆகியோர் திருவாரூர் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சொத்து வேண்டும்

இதையடுத்து மூவரும் சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தன்ராஜ் இறந்துவிட்டதால் அவர் மீதான குற்ற நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது.

இந்த தொகை நாங்கள் ஆஸ்பத்திரி கட்ட பலரிடம் கடனாக வாங்கி வைத்திருந்தது என்பதால், எங்களது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் சொத்து ஆவணங்களை வாரிசுகள் என்ற அடிப்படையில் எங்களிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

குற்றம் மறையாது

அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், "இந்த சொத்து மற்றும் ரொக்க பணம் சட்டவிரோதமாக வந்தது. தன்ராஜ் உயிருடன் இருக்கும்போதே இந்த தொகையை திருப்பி கேட்கவில்லை. இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது? என்பதற்கான ஆதாரங்களை மனுதாரர்கள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. தன்ராஜ் இறந்துவிட்டாலும், குற்றச்செயல் மறைந்து விடாது" என்று வாதிடப்பட்டது.

ஆதாரங்கள்

இதையடுத்து நீதிபதி, ஒரு அரசு ஊழியர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டால் அந்த சொத்துகள் சட்டப்பூர்வமாக வந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த சொத்துகளுக்கு வாரிசுகள் உரிமை கோர முடியும். மாறாக உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் உரிமை கோர முடியாது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story