ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டியது..!


கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தர்மபுரி:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரானது வினாடிக்கு 1லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் கரை பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்தபடி தண்ணீர் ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் மீதும் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவுவாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story