இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவன்


நரிக்குடி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது27). லாரி டிரைவர். இவருக்கும் நரிக்குடி அருகே உள்ள பனைக்குடி கிராமத்தை சேர்ந்த முத்துவள்ளி (24) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது.

இவர்களுக்கு குழந்தைஇல்லை. லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி பழனி வெளியூரில் தங்கி விடுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முத்துவள்ளியின் நடத்தையில் பழனி சந்தேகம் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அவனியாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் அங்கு குடியேறினர்.

சமாதானம்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், பழனி தினமும் முத்துவள்ளியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முத்துவள்ளி தனது சொந்த ஊரான பனைக்குடி கிராமத்திற்கு சென்று தனது தாய் முத்துமாரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து அவர்களது உறவினர்கள் முன்னிலையில் பழனி, முத்துவள்ளி ஆகிய 2 பேரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் முத்துவள்ளியை, பழனியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

சந்தேக மரணம்

முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந் தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இந்த சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி முத்துவள்ளியின் அக்கா கார்த்தீஸ்வரி அ.முக்குளம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் அ.முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

நாடகம் ஆடிய கணவர்

அப்போது முத்துவள்ளியின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பழனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முத்துவள்ளியின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பழனி, முத்துவள்ளியை அடித்துக்கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டதாகவும், பின்னர் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக பழனி நாடகம் ஆடியதும் தெரியவந்தது. இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.


Related Tags :
Next Story