தீயில் எரிந்து குடிசை நாசம்


தீயில் எரிந்து குடிசை நாசம்
x

தீயில் எரிந்து குடிசை நாசமானது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள மயிலாடி தெரு கிராமத்தை சேர்ந்தவர் ரோஜாமலர். இவர் குடும்பத்தினருடன் குடிசையில் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது குடிசையில் தீடீரென தீ பிடித்தது. இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். ஆடி மாதம் என்பதால் காற்று பலமாக வீசியது. இதனால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள், பாத்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story