ஏரி உபரி நீர் வாய்க்கால் தூர்வாரி தரப்படும்


ஏரி உபரி நீர் வாய்க்கால் தூர்வாரி தரப்படும்
x

அத்தியூர் கிராமத்தில் சொந்த செலவில் ஏரி உபரி நீர் வாய்க்கால் தூர்வாரி தரப்படும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உறுதி

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில் மழைக்காலங்களில் அத்தியூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கிராமம் மற்றும் காலனி வீதி வழியாக செல்வதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே குறிப்பிட்ட வாய்க்காலை தூர்வார வேண்டும் என அந்த பகுதி மக்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல். ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று அத்தியூர் கிராமத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அத்தியூர் ஏரியில் இருந்து தெற்கு தெருவையொட்டி செல்லும் உபரி நீர் வாய்க்காலை ஆய்வு செய்தார்.

அப்போது அரசு மூலம் கால்வாயை தூர்வாருவதற்குகால தாமதம் ஆகும் என்பதால் தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியை உடனடியாக செய்து தருவதாக கிராமமக்களிடம் தெரிவித்தார். உடன் இருந்த மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தனது செலவில் உபரி நீர் செல்லும் கால்வாயில் தடுப்புச்சுவர் அமைத்து தருவதாகவும், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் கால்வாயின் குறுக்கே மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் பாலம் அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தனர். தொடர்ந்து அத்தியூர் புது காலனியை ஆய்வுசெய்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அங்கு குளம்போல தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வழி செய்வதாக அந்தபகுதி மக்களிடம் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கோவிந்தன், துணை தலைவர் சதீஷ், மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், கே.ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் செந்தில், அண்ணாதுரை, ராஜேந்திரன், செல்வம், துரைமுருகன், பத்மநாபன், விஜயகுமார், ராஜீவ்காந்தி, ஊராட்சி செயலாளர்கள் சுகுமாரன், கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story