நிலத்தை, மனைகளாக திருத்தம் செய்து கணினியில் பதிவேற்ற வேண்டும்
நிலத்தை, மனைகளாக திருத்தம் செய்து கணினியில் பதிவேற்ற வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனா்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.
அப்போது நெல்லிக்குப்பம் நகரமன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன் தலைமையில், வாழப்பட்டு கம்பன்நகர் பகுதி மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கம்பன் நகர் புதுதெருவில் கடந்த 1987-ம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு அரசு இலவச மனை பட்டா வழங்கியது. அதுமுதல் அந்த இடத்தில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். ஆனால் அது மனையாக இல்லாமல், நிலமாக கணக்கில் இருப்பதால் எங்களுக்கு பட்டா மூலம் பெறும் எந்த சலுகையும் கிடைப்பதில்லை. எனவே அந்த பழைய பட்டா குறித்து விசாரித்து, நிலமாக உள்ளதை மனைகளாக திருத்தம் செய்து கணினியில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.