'லிப்ட்' கேட்டு சென்ற பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது


லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2023 8:57 PM GMT (Updated: 20 Feb 2023 9:48 AM GMT)

'லிப்ட்' கேட்டு சென்ற பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

சமயபுரம்:

பாலியல் பலாத்காரம்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). இவர் நேற்று முன்தினம் மதியம் ரெட்டிமாங்குடியில் இருந்து சிறுகனூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்ற 42 வயதுடைய ஒரு பெண், மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷிடம் 'லிப்ட்' கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுரேஷ் சிறுகனூர் நோக்கி வந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

கைது

பின்னர் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய சுரேஷ், மீண்டும் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுபான கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சுரேசை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மருத்துவ பரிசோதனை

மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது 2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ரெட்டிமாங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து 3 நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'லிப்ட்' கேட்டு சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story