கள்ளக்காதலுக்கு இடையூறு மனைவியை கழுத்தை அறுத்து கொன்றவர் காதலியுடன் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறு மனைவியை கழுத்தை அறுத்து கொன்றவர் காதலியுடன் கைது
x
தினத்தந்தி 30 Nov 2022 5:22 AM GMT (Updated: 30 Nov 2022 5:23 AM GMT)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றவரை அவரது காதலியுடன் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது40). பந்தல் அமைக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி தேவி (35). இந்த தம்பதிக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்சன் (8) என்ற 3 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் மாத்தினிபட்டியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணான சரோஜா (30) என்பவருக்கும், ராஜசேகருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தேவி, தனது கணவர் ராஜசேகரை கண்டித்தார்.

மேலும் சரோஜாவுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு தேவி பலமுறை வலியுறுத்தினார். இருப்பினும் ராஜசேகர் தனது மனைவி பேச்சை கேட்காமல், கள்ளக்காதலி சரோஜாவை அடிக்கடி சந்தித்து வந்ததாக தெரிகிறது.

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்படி கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில், கணவரிடம் கோபித்து கொண்டு தனது 3 மகன்களுடன் அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி சென்று விட்டார்.

இதனையடுத்து ராஜசேகர் அரண்மனையூருக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தார். இருப்பினும் ராஜசேகருடன் தேவி செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி ராஜசேகர், மீண்டும் அரண்மனையூருக்கு சென்றார். தேவியின் தாயார் தங்கம், தோட்ட வேலைக்கு சென்றிருந்தார். 3 குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், தனது மனைவி தேவியின் தலை முடியை பிடித்து ஜன்னல் கம்பியில் முகத்தை அடித்து சுவரில் மோதினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த தேவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

பின்னர் தனது கள்ளக்காதலி சரோஜாவுடன் ராஜசேகர் தலைமறைவாகி விட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து, எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், சரோஜா ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் திருச்சியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருச்சி சென்று இருவரையும் கைது செய்தனர்.

கைதான ராஜசேகர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி தேவி உயிரோடு இருந்தால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்று சரோஜா அடிக்கடி கூறி வந்தார். மேலும் அவரை கொலை செய்து விட்டால், நாம் சந்தோசமாக இருக்கலாம் என்று அவர் கூறினார். இதனால் தேவியை கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story