சுல்தான்பேட்டை அருகே பசுமாட்டை திருடியவர் கைது

சுல்தான்பேட்டை அருகே பசுமாட்டை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது45). இவர், தனது தோட்டத்தில் 4 பசுமாடுகள் வளர்த்து பால் கறந்து சுற்றுவட்டாரப்பகுதியில் விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். இரவு வழக்கம்போல் கருப்பசாமி 4 மாடுகளையும் தனது தோட்டத்து கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றார். அவரது மனைவி சசிகலா கொட்டகைக்கு சென்று பார்த்தபோது கருப்பு மற்றும் வெள்ளைநிறம் கொண்ட பசுமாடு ஒன்று காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சுல்தான்பேட்டை போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பசுமாட்டை திருடிச் சென்றது வீ.மேட்டூரை சேர்ந்த மணிமாறன் (36) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாட்டை மீட்டு, மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.