அனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை; திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


அனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை; திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x

அனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை என்று திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி

செம்பட்டு:

மனநிலையை நினைத்து வருத்தம்

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், கும்பகோணம் செல்வதற்காக விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது இரு மாநிலங்களின் கவர்னராக பணியாற்றி வருகிறேன். வரும் காலத்தில் ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் எனக்கு என்ன பணி வைத்துள்ளார்கள்? என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி பத்திரிகையில், நான் அவமதிக்கப்பட்டதாக எழுதி உள்ளார்கள். நான் அவமதிக்கப்படவில்லை. எதை பார்த்தும் அலறவும் இல்லை. புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான். வேறொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்பதை இங்கு உள்ள சிலர் நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அந்த மனநிலையை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.

அரசியலாக்கக்கூடாது

மரியாதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன். ஒருவரை வரவேற்பது பாரதத்தின், தமிழகத்தின், தெலுங்கானாவின் கலாசாரம். அது தெலுங்கானாவில் கடைபிடிக்கப்படவில்லை என மக்களுக்கு கூறுவது தான் என் நோக்கம். தெலுங்கானாவில் நடந்த நல்லதையும், சரியாக நடக்காததையும் தெரிவித்தேன்.

புதிய கல்வி கொள்கையை தெலுங்கானாவில் அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்தி அதை அமல்படுத்த கூறியிருக்கிறேன். புதிய கல்வி கொள்கையில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம், ஆனால் தேசிய கல்வி கொள்கையையே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது சரியல்ல. இதை அரசியலாக்கக்கூடாது.

தேர்வெழுத தயார்

அனைவருக்கும் உலக அளவிலான கல்வி வழங்க வேண்டும் என்பது தான் தேசிய கல்வி கொள்கை. அதை முழுவதுமாக படித்துவிட்டு எதிர்க்க வேண்டும். குழந்தைகள் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தான் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என கல்வி கொள்கையில் உள்ளது. அந்த தேர்வு அறிவிப்பை திடீரென அறிவிக்கவில்லை. பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசித்து தான் அறிவித்தோம். 3, 5, 8-ம் வகுப்பு குழந்தைகள் தேர்வெழுத தயாராக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story