கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த 'நீட்' தேர்வு


கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு
x
தினத்தந்தி 7 May 2023 7:00 PM GMT (Updated: 7 May 2023 7:01 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த ‘நீட்' தேர்வை 2 ஆயிரத்து 915 பேர் எழுதினர்.

திண்டுக்கல்

'நீட்' தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் 'நீட்' தேர்வு நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 988 பேருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்காக பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரி, நத்தம் என்.பி.ஆர். கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல் பிரசித்தி வித்யாலயா பள்ளி, பார்வதீஸ் அனுகிரகா சர்வதேச பள்ளி ஆகிய 5 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரியில் 936 பேரும், என்.பி.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் 696 பேரும், பாலிடெக்னிக் கல்லூரியில் 840 பேரும், திண்டுக்கல் பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 348 பேரும், பார்வதீஸ் அனுகிரகா சர்வதேச பள்ளியில் 168 பேரும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

5 மையங்கள்

மேற்கண்ட 5 மையங்களிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலை 9 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து காத்திருந்தனர். பின்னர் மதியம் 12 மணி முதல் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக தேர்வு எழுத வந்த மாணவிகள் அணிந்து வந்த ஆபரணங்களை கழற்றும்படியும், பின்னல் தலைமுடி, சடை பின்னல் போடக்கூடாது என்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையங்களுக்குள் செல்ல முயன்றனர்.

கடும் கட்டுப்பாடுகள்

அப்போது பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் கைகளை பிடித்து குலுக்கி வாழ்த்து தெரிவித்து தேர்வு மையங்களுக்குள் அனுப்பி வைத்தனர். அதேபோல் காலணி அணியாமல் ஷூ அணிந்து வந்தவர்கள், வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்தவர்கள், முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வேறு காலணி, டி-சர்ட், அரைக்கை சட்டை அணிந்து வந்த பின்னரே அவர்களை தேர்வு மையத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

மேலும் தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் நுழையும் முன்பு அவர்களின் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டது. இவ்வாறு கடும் கட்டுப்பாடுகளுக்கு பின்னரே தேர்வு அறைக்கு செல்ல மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

73 பேர் வரவில்லை

திண்டுக்கல் பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று 924 பேர் தேர்வு எழுதினர். 12 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதேபோல் நத்தம் என்.பி.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் 682 பேர் தேர்வு எழுதினர். 14 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 809 பேர் தேர்வு எழுதினர். 31 பேர் தேர்வு எழுத வரவில்லை. பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 334 பேர் தேர்வு எழுதினர். 14 பேர் தேர்வு எழுதவில்லை. பார்வதீஸ் அனுகிரகா சர்வதேச பள்ளியில் 166 பேர் தேர்வு எழுதினர். 2 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 915 பேர் தேர்வு எழுதிய நிலையில், 73 பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story