அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு


அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கோவை,

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 33). திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு அந்த பகுதியில் நடந்த ஒரு காதணி விழாவுக்கு மேடை அலங்காரம் செய்ய சென்றார்.

அப்போது அந்த விழாவை நடத்திய திருமணம் ஆன 30 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்த கள்ளக்காதல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததும், அவர் இதை கண்டித்தார். இதனால் அவர் வீரக்குமாரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

கணவன்-மனைவி தகராறு

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு வீரக்குமாருக்கு திருமணம் முடிந்தது. அதன்பிறகு வீரக்குமாருக்கு மீண்டும் அந்த 30 வயதான பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த பெண், வீரக்குமாருடன் இருந்த கள்ளக்காதலை விடவில்லை.

இதற்கிடையே, தனது கணவரின் கள்ளக்காதல் குறித்து வீரக்குமாரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு வீரக்குமாரிடம் கோபித்துக்கொண்டு அவருடைய மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பெற்றோர் வீட்டுக்கு வந்தார்

அதுபோல் வீரக்குமாரின் கள்ளக்காதலிக்கும், அவருடைய கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண், கணவரை பிரிந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு வடவள்ளி அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அந்த பெண், தனது பெற்றோரிடம் வீரக்குமாரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், அதுபோல் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், கணவருடன் சேர்ந்து வாழும்படியும் அறிவுறுத்தினர்.

பெண் கேட்டு சென்றார்

இந்த நிலையில் அந்த பெண், வீரக்குமாரை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு வந்து பெண் கேட்கும்படி கூறினார். உடனே அவர் தன்னுடன் வேலை பார்க்கும் 2 பேருடன் நேற்றுமுன்தினம் ஆண்டிபாளையத்துக்கு சென்று அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் தாய், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வீரக்குமாரின் தலையில் ஓங்கி வெட்டினார்.

தம்பதி கைது

இதில் படுகாயம் அடைந்த அவரை, அவருடன் சென்ற மற்ற 2 பேரும் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் அந்த பெண்ணின் தாய்-தந்தை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான அந்த பெண்ணின் தந்தை அ.தி.மு.க. நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story