எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை குறைகிறது


எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை குறைகிறது
x

கோப்புப்படம் 

குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை குறைக்க திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

ரெயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பிளாட்பாரம் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வினை கைவிட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் இப்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது.

நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும். இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம். ரெயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை ரெயில்வே வாரியம் குறைத்தது.

அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு இயக்கப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 13-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. இதன்மூலம் பெர்த்துகளின் எண்ணிக்கை 936-ல் இருந்து 780 ஆக குறைந்தது.

தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் ரெயில்களில் சீட் கிடைக்காமல் அவதிக்கு ஆளானார்கள். இதற்கான கண்டனத்தை ரெயில் பயணிகள் பதிவு செய்து வந்த நிலையில் இப்போது அடுத்த அதிரடியை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது. அதாவது குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை 2 ஆக குறைக்க திட்டமிட்டு உள்ளது.

இதற்கு பதிலாக அதே ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. தற்போது ரெயில்களில் ஏ.சி. முதல் அடுக்கு, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு பெட்டிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் டிக்கெட் விலை தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் டிக்கெட் கட்டணம் ரூ. 225. இதுவே ஏ.சி. 3 அடுக்கு பெட்டியில் பயணிக்க ரூ. 650 ஆகும். இது 3 மடங்கு அதிகமாகும். இந்த முடிவு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, சில ரெயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம், அதன் பிறகே இந்த முடிவு செயல்பாட்டுக்கு வரும் என்றார். ரெயில் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ரெயில்வேயின் வருமானத்தை உயர்த்த வாரியம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story