விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி குடிபோதையில் ரகளை


விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி குடிபோதையில் ரகளை
x
தினத்தந்தி 23 Sep 2023 7:00 PM GMT (Updated: 23 Sep 2023 7:01 PM GMT)

கோவை விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு, ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமராவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த அதிகாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு, ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமராவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானப்படை நிர்வாக அதிகாரி

கோவை ரெட்பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள விமானப்படை நிர்வாக அதிகாரிகளுககு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு சண்டிகார் நகரை சேர்ந்த அதிகாரி பூபிந்தர் சிங் பயிற்சிக்கு வந்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் நள்ளிரவு நிர்வாகவியல் பயிற்சி கல்லூரியில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு குடிபோதையில் நடந்து சென்றுள்ளார்.

அங்கிருந்த பெட்டிக்கடைக்கு சென்று, ரூ.500 கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். சில்லரை இல்லை என்று பெட்டிக்கடைக்காரர் ரூ.500-ஐ திருப்பி கொடுத்ததும், அவரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அங்குள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு நள்ளிரவு 1 மணிக்கு சென்ற பூபிந்தர் சிங், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புகார்

மேலும் அந்த பகுதியில் நடுரோட்டில் நின்றபடி கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, தன்னை ரெட்பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாக பயிற்சி கல்லூரியில் கொண்டு போய் விடுமாறு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த சிலர், இரவு ரோந்து போலீசிடம் பலரும் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து விமானப்படை நிர்வாகவியல் கல்லூரி அதிகாரிகள் காரில் வந்து அவரை மீட்டுச்சென்றனர். காட்டூர் போலீசார் நடந்த சம்பவம் குறித்து பூபிந்தர்சிங் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

விசாரணை

இதைத்தொடர்ந்து நேற்று காலை இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் முன்னிலையில், விமானப்படை அதிகாரி பூபிந்தர் சிங் ஆஜராகி நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். உடைந்த கண்காணிப்பு கேமராவுக்கான செலவு தொகையை ஏற்றுக்கொள்வதாக கூறினார். வங்கி அதிகாரிகளும், அந்த அதிகாரிக்கு எதிராக புகார் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரச்சினை சுமூகமாக முடிந்தது. இருந்தாலும் மேல் அதிகாரியின் விசாரணைக்காக நாளை (திங்கட்கிழமை) ஆஜர் ஆகுமாறும் பூபிந்தர் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.


Next Story