மந்த கதியில் நடந்து வரும் வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


மந்த கதியில் நடந்து வரும் வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x

மந்த கதியில் நடந்து வரும் வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள வல்லக்கோட்டை ஊராட்சியில் பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் புதிய கட்டிடம் இன்னும் முழுமையடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பணி முழுமை அடையாமல் இருப்பதால் அந்த பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் கட்டிட பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. மேலும் தற்காலிகமாக அந்த பகுதியில் உள்ள நூலக கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது.

ஊராட்சியின் கோப்புகள் முக்கியமான ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் உள்ள சிறிய அளவிலான நூலக கட்டிடத்தில் மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறும் அதே சமயத்தில் நூலகத்திற்கு வாசகர்களும், பொதுமக்களும் வருவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒரு சிலருக்கு நூலக கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்குவது தெரியாமலே சென்று விடுகின்றனர்.

ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story