செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் விஷம் குடித்த மகன்; விரக்தியில் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை


செல்போனில் விளையாடியதை கண்டித்ததால்  விஷம் குடித்த மகன்; விரக்தியில் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Feb 2023 7:24 PM GMT (Updated: 4 Feb 2023 9:23 AM GMT)

திருவட்டார் அருகே செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் மகன் விஷம் குடித்தார். இதனால், மனமுடைந்த தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் மகன் விஷம் குடித்தார். இதனால், மனமுடைந்த தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயரிங் மாணவர்

திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் சியோன்மலை தெற்கு கைசாலவிளையை சேர்ந்தவர் ரெவி (வயது52), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் மகன் வீட்டில் செல்போனில் விளையாடி கொண்டிருப்பதாக தெரிகிறது. இதை ரெவி கண்டித்தார். இதனால் தந்தை-மகன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திராவகம் குடித்த தந்தை

இதன்பின்பு ரெவி மிகவும் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலையில் ரெவி வீட்டில் ரப்பர் பால் உறைய பயன்படுத்தும் திராவகம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ெரவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், தந்தை திராவகம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story