அமைச்சருடன் வீடியோ எடுத்த வாலிபர்களை எச்சரித்த போலீசார்


அமைச்சருடன் வீடியோ எடுத்த வாலிபர்களை எச்சரித்த போலீசார்
x

அமைச்சருடன் வீடியோ எடுத்த வாலிபர்களை போலீசார் எச்சரித்தனர்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க நேற்று அமைச்சர் சிவசங்கர் வந்திருந்தார். பல்வேறு கிராமங்களில் திட்ட பணிகளை தொடங்கி வைத்துவிட்டு, சன்னாசிநல்லூரில் இருந்து குழுமூர் நோக்கி அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது குழுமூர் காட்டுப்பகுதியில் 2 வாலிபர்கள் செல்போனுடன் அமைச்சரின் காரை வழிமறித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் அமைச்சர் பேசினார். பின்னர் அவர் குழுமூர் கிராமத்தில் நடந்த துணை சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் குடிபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் அங்கு விரைந்து வந்து, நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கிளம்பிய அமைச்சரிடம் வந்து செல்பி எடுப்பது போல் நடித்து, அமைச்சரிடம் டாஸ்மாக் கடையில் கூடுதலாக வாங்கும் 5 ரூபாயை குறையுங்கள் என்று ரகசியமாக வீடியோ எடுத்தனர். இதனை அறிந்த அமைச்சர் உஷாராகி, அந்த வாலிபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து செந்துறை போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர்கள் கல்லங்குறிச்சி அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அமைச்சரிடம் பிரச்சினை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story