6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்


6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
x

சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 27-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் இதுவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தீவிரப்படுத்த முடிவு

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். 5-வது நாளான நேற்று முன்தினம் 170-க்கும் மேற்பட்டோர் மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிலர் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் போராட்டக்களத்துக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் 6-வது நாளாக நேற்றும் இடைநிலை ஆசிரியர் களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. அரசு தொடர்ந்து கோரிக்கைக்கு செவி சாய்க்காத பட்சத்தில், அடுத்த கட்டமாக போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்து இருப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதனால் நேற்றைய போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலானோர் தண்ணீர் கூட குடிக்காமல் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

முதல்-அமைச்சரின் அறிவிப்பு

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டார். முதல்-அமைச்சரே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவது என போராட்டக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்க மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:-

வாபஸ் பெற முடிவு

இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மட்டுமே குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முதன்முறையாக இடைநிலை ஆசிரியர்களுக்காக குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் தாயுள்ளத்துடன் அறிவித்துள்ளார். இதற்காக மகிழ்ச்சி கொள்வதுடன், நிச்சயம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கிறது. முதல்-அமைச்சரின் வார்த்தையை நம்பி எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் 20 ஆயிரம் ஆசிரியர் குடும்பங்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவுக்கு வந்த போராட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை மூலம் 6 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கடந்த 6 நாட்களாக போராட்ட மையமாக மாறியிருந்த டி.பி.ஐ. வளாகம் நேற்று மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.


Next Story