பட்டா இடம் என கூறி தெருவை தோண்டியதால் பரபரப்பு பொதுமக்கள் மறியல்


பட்டா இடம் என கூறி தெருவை தோண்டியதால் பரபரப்பு பொதுமக்கள் மறியல்
x

பட்டா இடம் என கூறி தெருவை தோண்டியதால் பரபரப்பு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

பட்டா இடம் என கூறி தெருவை தோண்டியதால் பரபரப்பு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி, சேத்துப்பட்டு நெடுஞ்சாலை பகுதியில் மில்லர்ஸ் ரோட்டில் பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கார்டன் என்ற இடம் உள்ளது. இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 45 வீடுகள் கட்டி குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பொது வழியாக இருந்த தெருவினை சதுப்பேரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பட்டா நிலம் என்றும் நீதிமன்ற உத்தரவின் படி தெரு எனக்கு சொந்தம் என கூறி வழியை மறித்து செங்கற்களை இறக்கியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டிற்கு செல்ல வழியில்லாததால் அவர்கள் ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திலும் குடியிருப்பு வாசிகள் புகார் மனு அளித்தனர்.

சம்பந்தப்பட்டவர்களை ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா அழைத்துப் பேசி சமரச கூட்டம் நடத்துவதாக உறுதியளித்தார். அதன்படி பேசிக்கொண்டு இருந்த நிலையில் ரோட்டின் முகப்பில் சுமார் 1000 செங்கற்களை வைத்தும் ஒரு பகுதி சாலை முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் முகப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயபால், மகேந்திரன், சுந்தரேசன் உள்பட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story