மாணவர்களுக்கிடையே கொண்டு சேர்ப்பதே தமிழ் கனவு நிகழ்ச்சியின் நோக்கம்


மாணவர்களுக்கிடையே கொண்டு சேர்ப்பதே தமிழ் கனவு நிகழ்ச்சியின் நோக்கம்
x

மாணவர்களுக்கிடையே கொண்டு சேர்ப்பதே தமிழ் கனவு நிகழ்ச்சியின் நோக்கம்

திருவாரூர்

பண்பாடுகளின் பெருமையினையும், வளமையினையும் மாணவர்களுக்கிடையே கொண்டு சேர்ப்பதே தமிழ் கனவு நிகழ்ச்சியின் நோக்கமாகும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

தமிழ் கனவு நிகழ்ச்சி

திருவாரூர் மத்தியபல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ் கனவின் நிகழ்ச்சியினை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்தாண்டு இந்த நிகழ்வானது ஜூலை மாதம் தொடங்கியது. உலகில் செழிந்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ் பண்பாடுகளின் பெருமையினையும், வளமையினையும் அம்மொழி எதிர்கொண்ட சவால்களை மாணவ-மாணவிகளுக்கிடையே கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

நமது பண்பாட்டின் பெருமையினை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உணர்த்துவது ஆரோக்கிய எதிர்கால சமுதாயத்தின் முக்கியமான பகுதியாகும். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழ் மரபும், நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, கல்விபுரட்சி, அரசின் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் முறைகள் போன்ற தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவுகளை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் குறித்த கையேடு வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை படித்து மாணவ-மாணவிகள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பரிசு-பாராட்டு சான்றிதழ்

நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் செந்தில்வேல் மெய்ப்பொருள், கான்பது அறிவு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அதனை தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கிடையே சொற்பொழிவாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், சிறந்த கேள்வி கேட்ட சிறந்த கேள்வியாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்.

இதில் மத்திய பல்கலைக்கழக பதிவாளர் திருமுருகன், திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திறன் பயிற்சித்துறை உதவி இயக்குனர் செந்தில்குமாரி, முதன்மை வங்கி மேலாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story