கார் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்பு


கார் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்பு
x

மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

சென்னை,

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவரும் சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றி துரைசாமி காரில் விமான நிலையம் புறப்பட்டார்.

இந்த நிலையில் கார், கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் தஞ்ஜின் உயிரிழந்தார். மேலும் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியை காணவில்லை. அவரை தேடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.


Next Story