ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்


ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:46 PM GMT)

நீடாமங்கலம் ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

3 நடைமேடைகள்

நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. இதில் நாள்தோறும் பாசஞ்ஜர் ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றன. நாள்தோறும் மூன்று நடைமேடை பகுதிகளிலும் நின்று செல்லும் ரெயில்களில் இருந்து பயணிகள் மெயின் ரோடு பகுதிக்கு இந்த நடைமேடை பகுதி வழியாக நடந்து செல்கின்றனர்.

நடைமேடையின் உயரமான பகுதியிலிருந்து சற்று இறக்கமான பாதைவழியாக மெயின்ரோடை சென்றடையும் பாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

சிரமப்பட்டு ஏறி செல்கின்றனர்

இதனால் பயணிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து அவ்வப்போது காயம் அடைந்து வருகின்றனர். ரெயில் ஏறச்செல்லும் பயணிகளும் இந்த நடைமேடை பாதையில் சிரமப்பட்டு ஏறிச்செல்ல வேண்டியுள்ளது.

நீண்ட நாட்களாக உள்ள இந்த பிரச்சினையை ரெயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது என ரெயில் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குடிநீர் வசதி

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் நிலைய நடைமேடை பகுதிக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அங்கு ரெயில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி போதுமானதாக இல்லை. அதனையும் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story