ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x

கரூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகங்கள் வெறிச்சோடியது.

கரூர்

விடுப்பு எடுத்து போராட்டம்

ஊரக வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள் காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப், காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கரூவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நவம்பர் 23, 24-ந் தேதிகளில் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகங்கள் வெறிச்சோடின

இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிடவற்றில் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் பணிக்கு வராததால் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து நாளையும் (அதாவது இன்று) விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தினால் அலுவலக பணிகள் பாதிப்படைந்தன.


Next Story