விழுப்புரத்தில் ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகம்


விழுப்புரத்தில் ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம்

ஆயுதபூஜை

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் நவராத்திரியும் ஒன்றாகும். 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்நாட்களில் கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவார்கள். நவராத்திரி விழாவின் நிறைவு நாள் ஆயுதபூஜையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளான இன்று(திங்கட்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அனைத்து பொருட்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பூஜை கொண்டாடப்படுகிறது. பெட்டிக்கடையில் இருந்து பெரிய தொழிற்சாலைகள் வரை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. வீடுகளில் சரஸ்வதி படத்திற்கு முன்பாக குழந்தைகளின் கல்விச்செல்வம் பெருகும் வகையில் நோட்டு, புத்தகங்கள், பென்சில், பேனா உள்பட அனைத்தையும் வைத்து பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

விஜயதசமி

ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதில் ஆயுதபூஜையன்று சரஸ்வதி தேவியின் முன், பூஜையில் வைத்த நோட்டு, புத்தகத்தை எடுப்பதை ஏடு பிரித்தல் என்று சொல்வார்கள்.

பூஜையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தில் இருந்து பாடங்களை படிப்பதும், தொழில் கருவிகளை கொண்டு தொழிலை தொடங்குவதும் மிகவும் நன்மை தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்நாளில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது காலம், காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் வீட்டையே பள்ளிக்கூடமாக்கி பூஜை அறையில் சரஸ்வதி படத்திற்கு முன்பாக குழந்தையை உட்கார வைத்து பெரிய தாம்பூலத்தில் அரிசியை வைத்து குழந்தையின் கையை பிடித்து "அ" என்று எழுத சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.

பூஜை பொருட்கள் விற்பனை

ஆயுதபூஜை வழிபாட்டிற்கான பொருட்கள் விற்பனை நேற்று முதல் விழுப்புரம் பகுதியில் அமோகமாக நடந்து வருகிறது. இதையொட்டி விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா சாலைகளில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் நேருஜி சாலை, கே.கே.சாலையில் உள்ள கடைகளில் பூஜை பொருட்களான அவல், பொரி, பொட்டுக்கடலை மற்றும் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இதை விழுப்புரம் நகர மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

இதன் காரணமாக விழுப்புரம் நகரில் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், பணியில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினாலும் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.


Next Story