விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்


விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:46 PM GMT)

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சந்தோஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த விதைகள் அல்லது சாகுபடிக்கு பயன்படுத்த உள்ள விதைகள், வினியோகத்திற்கு பயன்படுத்த உள்ள விதைகளை வாங்கும் விவசாயிகள், அதனை பரிசோதனை செய்து பயன்படுத்தலாம். விதை உற்பத்திக்கு பயன்படுத்தும் விதை குவியலில் பிற ரகங்களின் கலப்பு குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் அடுத்த பருவத்தில் பயன்படுத்தும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட ரகங்களின் கலவையால் பூக்கும் பருவம், பயிர்களின் உயரம், அறுவடை காலம் ஆகியவை மாறுபட்டு இருக்கும். எனவே கலப்பில்லாத தரமான விதை உற்பத்தி செய்ய உற்பத்திக்கு பயன்படுத்தும் விதையில் பிற ரக கலப்பின் விகிதம் அனுமதிக்கப்படும் அளவிற்குட்பட்டு இருப்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

ரூ.80 ஆய்வுக்கட்டணம்

மேலும் தங்களிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளில் இருந்து மாதிரி எடுத்து அளித்தால் விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு, முளைப்புத்திறன் ஆகியவை பரிசோதனை செய்து முடிவுகள் வழங்கப்படும். விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து நம்பகத்தன்மை கெடாமல் வியாபாரம் செய்ய தங்களிடம் உள்ள அனைத்து விதைகளையும் பரிசோதித்து பின்னர் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்ய விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக்கட்டணமாக செலுத்தி விதையின் தரம் அறிந்து விதைக்கவும், அறுவடை செய்த விதையை அடுத்த விதைப்புக்கு சேமிக்கவும், விதையின் ஈரப்பதம் அறிந்துகொண்டு விதைகள், பூச்சிநோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் சேமிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story