தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்


தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்
x

வேலூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் தகராறு

வேலூர் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவர் காட்பாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் சரத்குமார் (27). சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரத்குமார் குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கும், தேவராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தேவராஜ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மகன் மீது வீசினார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தேவராஜின் கழுத்தில் அறுத்துள்ளார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அதைப்பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அவரை மீட்டு அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மகன் கைது

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சரத்குமாரை கைது செய்தனர்.

குடிபோதையில் பெற்ற மகனே தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story