கொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு


கொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 6 May 2023 6:45 PM GMT (Updated: 6 May 2023 6:45 PM GMT)

திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தில் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு

சித்ரா பவுர்ணமியையொட்டி திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தில் உள்ள சிந்தாமணி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கோவிலில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சாமியாட்டம் மற்றும் பூக்குழி இறங்குதல் நடந்தது. இந்நிலையில் நேற்று கோவில் விழாவையொட்டி கொரட்டி ஆரடி சாத்த அய்யனார் கோவில் எதிரே உள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. மஞ்சுவிரட்டிற்கு 290 மாடுகள் பதிவு செய்யப்பட்டன. 30 மாடுபிடி வீரர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அமர்த்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கொரட்டி கிராமத்திலிருந்து சிந்தாமணி அம்மன் கோவிலில் இருந்து கிராமத்தார்கள் மற்றும் சாமியாடிகள் ஜவுளி எடுத்து வாடிவாசலுக்கு கொண்டு சென்றனர். அங்கு கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.

பரிசுகள்

திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் வாடிவாசல் வழியாக மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த மாடுகளை மாடு பிடி வீரர்கள் அடக்கினர். இதில் பல மாடுகள் பிடிபடாமல் சென்றன. ஒரு சில மாடுகள் பிடிபட்டன.

இந்த போட்டியின்போது சிலர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் கிராமத்தின் சார்பில் அண்டா, குத்துவிளக்கு, வாலி, போன் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குன்றக்குடி இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கொரட்டி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story