அரசு தரப்பு வாதம் நிறைவடைந்தது


அரசு தரப்பு வாதம் நிறைவடைந்தது
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:47 PM GMT)

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பு வாதம் நிறைவடைந்தது விசாரணை 5-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்துள்ளதால் தற்போது இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அரசு தரப்பில் வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராகி, இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் வாதிட்டனர். அரசு தரப்பின் வாதம் முடிவடைந்த நிலையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காக இவ்வழக்கின் விசாரணையை வருகிற 5-ந் தேதிக்கு(திங்கட்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.


Next Story