சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓடையில் கவிழ்ந்து மாணவர் பலி


சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓடையில் கவிழ்ந்து மாணவர் பலி
x

சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓடையில் கவிழ்ந்து மாணவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

குன்னம்:

வயலில் இருந்து வீட்டிற்கு...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் தர்மராஜ் (வயது 16). இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் நேற்று மாலை தனது நண்பர்களான 15 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் மற்றும் 12 வயதுடைய சிறுவன் ஆகியோருடன் சிறுகுடல்-வாலிகண்டபுரம் சாலையில் உள்ள ஒரு வயலில் இருந்து டிராக்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். டிராக்டரை 15 வயது சிறுவன் ஓட்டியுள்ளார்.

3 சிறுவர்கள் காயம்

அப்போது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் இடது புறத்தில் உள்ள ஓடைப்பகுதியில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டிய சிறுவன்உள்பட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த தர்மராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை கண்டு கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story