தாயிடம் தகராறு செய்த தந்தையை கீழே தள்ளிவிட்டு கொன்ற மாணவர் கைது


தாயிடம் தகராறு செய்த தந்தையை கீழே தள்ளிவிட்டு கொன்ற மாணவர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 10:10 AM GMT)

தாயிடம் தகராறு செய்த தந்தையை கீழே தள்ளிவிட்டு கொன்ற மாணவர் கைது

திருவாரூர்

குடவாசல் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை கீழே தள்ளிவிட்டு கொன்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் மனைவியிடம் தகராறு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மேலராமன்சேத்தி மெயின்ரோட்டு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 45). இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் டேவிட்ராஜ்(18). இவர் நன்னிலம் அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் படித்து வருகிறார்.

விவசாய கூலித்தொழிலாளியான சுரேஷ் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் சத்யாவிடம் தகராறு செய்துள்ளார்.

கீழே தள்ளி விட்டதில் சாவு

இதனை பார்த்த டேவிட்ராஜ், ஏன் மதுகுடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த டேவிட்ராஜ், தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த சுரேசுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து குடவாசல் போலீஸ் நிலையத்தில் மேலராமன்சேத்தி கிராம நிர்வாக அலுவலர் நித்யா புகார் கொடுத்தார். அதன்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமல்தாஸ், கமலநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டேவிட்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story