பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 17 Oct 2022 1:09 AM GMT (Updated: 17 Oct 2022 1:21 AM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்பது தெரியவரும்.

சென்னை,

தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அத்துடன் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் 6 மாதத்துக்குள் கூட்ட வேண்டும் என்ற விதிகள் இருக்கிறது. அதன் அடிப்படையில், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதிக்குள் தமிழக சட்டசபை கூட்ட வேண்டும். எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது.

கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு, மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பார். அத்துடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, இந்த மழைக்கால கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

அந்த வகையில், நாளை (செவ்வாய்க்்கிழமை) சட்டசபையில் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இறுதி நாளில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாரின் விசாரணை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார். எனவே, அவருக்கே இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில், இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இப்போது எதுவும் முடிவு எடுக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். எனவே, இந்த விஷயத்தில் சபாநாயகர் மு.அப்பாவு என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பது இன்று தெரிந்துவிடும்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு?, 3 விசாரணை அறிக்கைகளின் முடிவு என்ன? என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த சட்டசபை கூட்டத் தொடரில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.


Related Tags :
Next Story