முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 22-ந் தேதி நடைபெறுகிறது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 22-ந் தேதி நடைபெறுகிறது
x

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-ந் தேதி அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டோக்கன், விண்ணப்பம் வழங்கும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்க உள்ளன.

செப்டம்பர் 15-ந் தேதி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-ந் தேதி காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்திற்கு வரவுள்ள புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும்

தொடர் சோதனை

தற்போது தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைக்கும் சூழ்நிலையில், தமிழக அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத் துறையின் தொடர் சோதனை நடந்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்த இலாகாக்கள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடிக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் வீட்டில் இந்திய, வெளிநாட்டு பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

சட்டசபை கூட்டம்

அமைச்சர் பொன்முடியையும், அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யையும் அமலாக்கத் துறையினர் விசாரித்தனர். அவர்களும் கைது செய்யப்படுவார்களோ? என்ற சந்தேகம் தமிழக அரசுக்கு எழுந்துள்ளது. அடுத்தடுத்து மேலும் சில அமைச்சர்களும் அமலாக்கத் துறையின் சோதனை வட்டத்தில் சிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் போகப்போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் 22-ந் தேதியன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும்படி அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு, விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக தமிழக சட்டசபையை உடனே கூட்டி, மத்திய அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை பற்றியும் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story