சென்னை ஐகோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது தமிழக காவல்துறை


சென்னை ஐகோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது தமிழக காவல்துறை
x

ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

காவல்துறையில் `ஆர்டர்லி' என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலத்தில், போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆரம்பத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுநராக இருப்பது, உதவியாளராக இருப்பது மட்டும்தான் ஆர்டர்லி வேலையாக இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் வீட்டு வேலைகளை செய்யும் ஆட்களாக ஆர்டர்லிகள் மாற்றப்படனர்.

ஆனால், உயர் அதிகாரி, நம்பிக்கை, மரியாதை, பாசம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு உறவைக் கட்டி எழுப்பவும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற நிலையில், மூத்த தலைமையுடன் தொடர்புகொள்ளவும் ஆர்டர்லி முறை வாய்ப்பளிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், வீட்டு வேலைகளில் காவலர்களை பொருத்தமற்றது, கண்டிக்கத்தக்கது என்ற குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு வழக்கில், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. காவலர் பயிற்சியை முடித்துவிட்டு 45,000 சம்பளம் வாங்கும் காவலரை உயர் அதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டு வேலைக்கு பயன்படுத்துவது குற்றம் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் 'ஆர்டர்லி'யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது. மேலும், 150 போலீசார் இன்னும் தங்கள் காவல் பணிக்கு திரும்ப வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story