தூக்கில் பிணமாக தொங்கியவர் ஆசிரியையின் கணவர்


தூக்கில் பிணமாக தொங்கியவர் ஆசிரியையின் கணவர்
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:46 PM GMT)

வெலிங்டன் வாய்க்கால் கரையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் ஆசிாியையின் கணவர் என்பது தொியவந்துள்ளது. அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

கடலூர்

ராமநத்தம்

தூக்கில் பிணம்

ராமநத்தம் வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் கரை ஓரம் உள்ள மரத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார் தூக்கில் தொங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தூக்கில் பிணமாக தொங்கியவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

தனியாா் பஸ் டிரைவர்

போலீசாரின் தீவிர விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த கோபு(வயது 54) என்பதும், இவருக்கு சங்கீதா(41) என்ற மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளதும் தெரியவந்தது. சங்கீதா பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்த கோபு மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளதும், கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வெலிங்டன் ஏரிக்கரையோரம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

இணையதளத்தில் போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து சங்கீதா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்து தனது கணவரின் உடலை அடையாளம் காட்டினார். மேலும் கோபுவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து ராமநத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story